Main Menu

இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில்வே பணிகள் தொடங்கப்படும் – நேபாள ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி கூறியுள்ளார்.

இது குறித்து நேபாளத்தில் நேற்று கூடிய பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பித்யா கூறியதாவது:

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்க ஏற்கனவே திட்டம் போடப்பட்டது. அதன் படி பிர்கஞ்ச்- காத்மண்ட், ரசுவகாதி- காத்மண்ட் ஆகியவற்றை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் 2 ஆண்டுகளுக்குள் விரைவில் தொடங்கப்படும்.

ஜெயநகர்-பிஜல்பூரா மற்றும் இந்தியாவின் பத்னாஹா, பிராட்நகர் ஆகிய பகுதிகளுக்கு அடுத்த நிதியாண்டுக்குள் ரயில்வே சேவை செயல்படுத்தப்படும். பிஜல்பூரா-பர்டிபஸ் பகுதிகளுக்கான ரெயில்வே கட்டுமான பணி விரைவில் முடிவடைய உள்ளது. இவற்றின் சேவையும் விரைவாக தொடங்கப்படும்.

நேபாளத்துடன் இந்தியா, சீனா போன்ற நாடுகளை இணைக்க வேண்டி, நேபாள அரசு ரெயில்வே கட்டுமான பணிகளுக்கான தொழில்நுட்ப ஆய்வுகளை முடித்துள்ளது. அதன் அடிப்படையில் இரு நாடுகளின் ஒத்துழைப்புடனும், வரவேற்புடனும் இந்த திட்டம் செயல்பட உள்ளது. ரெயில்வே பாதைகள் அமைப்பது மட்டுமின்றி, வரும் நிதியாண்டில் 5 லட்சம் பேருக்கு பணிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...