இந்தியாவை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்ரேலியா!
பெண்கள் உலகக்கிண்ண இருபதுக்கு இருப்பது தொடரில் இந்தியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா அணி 85 ஓட்டங்களினால் வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்ரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதில் அவுஸ்ரேலியா அணி சார்பாக பெத் மூனி 78 ஓட்டங்களையும் அலிஸா ஹீலி 75 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொண்டனர்.
இதனை அடுத்து 185 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனால் அவுஸ்ரேலியா அணி 85 ஓட்டங்களினால் வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை 5 ஆவது முறையாகவும் கைப்பற்றியது.