Main Menu

ஆலயங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆலயங்களை எதிர்வரும் ஜூன் மாதத்தில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்திலுள்ள அனைத்து ஆலயங்களும் திறக்கப்பட வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் மாநிலம் முழுவதும் அரசின் கோட்பாடுகள், வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

இருப்பினும் கொரோனா பரவலின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல மாவட்டங்களில் சில தளர்வுகளும் வெளியிடப்பட்டு மக்களின் சிரமங்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளது.

அந்தவகையில் ஆலயங்களை  திறந்தால் கோயில்களை நம்பிப் பிழைப்பை நடத்தும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர முடியும்.

அதாவது, ஆலயங்கள் மூடப்பட்டிருப்பதால் அதன் வாயில்களில், நடைபாதையில், தெருக்களில் கடை வைத்திருப்பவர்கள் வருமானம் ஈட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக கோயில்களுக்குப் பயன்படுத்தப்படும் பூ, மாலை, சூடம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைத் தயாரிக்கும், விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளர்கள் தற்போது தொழிலில் ஈடுபட முடியாமல் பொருளாதாரம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகிறார்கள். அது மட்டுமல்ல சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில், பல ஆலயங்களின் பூஜைகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.  எனவே, இந்து சமய அறநிலையத் துறையானது ஆலயங்களைத் திறந்து தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட அரசின் 100 சதவீத கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த, சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

ஏனென்றால் அரசின் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி ஆலயங்கள் திறக்கப்பட்டால் அந்தந்த மாவட்டப் பகுதியிலுள்ள ஆலயங்களை நம்பி கடை வைத்திருப்பவர்கள், தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு அவர்களும் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வை பெறுவதுடன் அந்தந்த மாவட்டப் பொருளாதாரமும் மேம்பட்டு, மாநிலப் பொருளாதாரமும் உயரும்.

எனவே தமிழக அரசு ஜூன் மாதத்தில், மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களை திறக்க ஆலோசனைகளை மேற்கொள்ளவும் மற்றும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களையும் அரசின் விதிமுறைகளைப் பயன்படுத்தி திறக்க ஆலோசனைகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...