Main Menu

ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைவு – துளசி

இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைந்துள்ளதாக ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் மற்றும் சில அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியா தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடி புனர்வாழ்வு பெற்ற போராளிகள் போருக்குப் பின்னர் பல்வேறு தளங்களிலே செயற்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக பல்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்த அனைத்துப் போராளிகளும் சில கட்டமைப்புக்களும் இன்று முதல் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.

இந்தப் போராளிக் கட்டமைப்புகள் தமிழர்களது இனப் பிரச்சினைக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பாக ஆராய்வது, அரசியல் கைதிகளின் விடுதலை, வேலை வாய்ப்பில் போராளிகளை முன்னிலைப்படுத்துவது போன்ற விடயங்களை பிரதானமாக ஆராய்கின்றது.

எங்களுடன் இருந்து பயணித்த பல நண்பர்கள் இன்று காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்களின் வலிகளை உண்மையாக உணர்ந்தவர்கள் நாங்களே. அந்த வகையில் அவர்களது விடயம் தொடர்பாகவும் சாத்தியமான முறையில் நாம் ஆராய்வோம்.

தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு அடிப்படையான தீர்வாகக்கொண்டு எதிர்காலத்தில் செயலாற்றுவது சிறந்தது என நாம் கருதுகிறோம். நாங்கள் ஒன்றிணைந்திருப்பது தனியாக போராளிகளின் நலன்களைக் கருதி மாத்திரமல்ல.

மாவீரர் குடும்பங்கள், போரில் அழிவடைந்த குடும்பங்கள், போராட்டத்தை நம்பிப் பயணித்த வடக்கு கிழக்கு மக்கள் என அனைவருக்காகவுமே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இனிவரும் காலங்களில் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரேயணியாக செயற்படும்.

மக்களுக்குத் தேவையான அரசியலை இங்கே இருக்கும் கட்சிகளால் ஆற்றப்பட்ட பணிகளில் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாகவே போராளிகள் மீளவும் அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றார்கள். போராளிகளை கொண்டமைத்துள்ள இந்த அமைப்பு இலங்கையின் இறையாண்மைக்கும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் எதிராக எப்போதும் செயற்பாடாது” என்றார்.

பகிரவும்...