Main Menu

ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி தாக்குதலை முறியடித்தது போலீஸ் – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியாமல் இன்னும் உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறித்தான் வருகின்றன. இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது நடத்தி வருகிற தாக்குதல்களே சான்றாக அமைகின்றன.

அங்கு காந்தஹார் நகரிலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இருப்பினும் பாதுகாப்பு படைகள் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து அவர்களை ஒடுக்கி வந்தனர்.

இந்த நிலையில் காந்தஹார் அருகே அமைந்துள்ள போல்டாக் நிகா போலீஸ் பாதுகாப்பு சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு தலீபான் பயங்கரவாதிகள் நேற்று அதிகாலையில் முற்றுகையிட்டனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் சுதாரித்துக்கொண்டு எதிர் தாக்குதல் நடத்தி, சோதனைச்சாவடி தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்.

இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதன் முடிவில் 14 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். மேலும் 7 தலீபான் பயங்கரவாதிகளும், 4 போலீஸ் அதிகாரிகளும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த மோதல், காந்தஹார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிரவும்...