Main Menu

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் – 30 பேர் பரிதாப பலி

ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்தனர்.

இதன்பின்னர் 6.50 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. மருத்துவ துறையை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் பலர் பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையை சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிடச் சென்றவர்கள்.

இதையடுத்து அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

பகிரவும்...