Main Menu

ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியுள்ளமையினால் பிணையில் செல்ல அனுமதி வழங்க வேண்டுமென  ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இவ்விடயம் குறித்து சிறை அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது? அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதென நீதிமன்றத்தினால் விளக்கம் கேட்கப்பட்டது.

இதற்கு சிறையில் மொத்தம் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சிறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

இவ்விடயம் குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜாராவ் தெரிவித்துள்ளதாவது, “எய்ட்ஸ் பாதிப்புள்ள 27 கைதிகளில் 19 பேர் தண்டனை காலத்தை அனுபவிக்கவரும் போதே அவர்களுக்கு நோய் இருந்தது.

ஏனைய  8 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற அனைவருக்கும் வாரம் ஒரு முறை அரச வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார்.

ஆனால் சிறையில் கைதிகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு வசதிகள் இல்லை எனவும், சிறையிலுள்ள வைத்தியசாலை வைத்தியர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

மேலும் சிறையில் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் நடப்பதாகவும் கைதிகளுக்கு ஒழுங்காக உணவு வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த முறைப்பாடுகளை  மறுத்துள்ள சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், நோய் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

பகிரவும்...