Main Menu

ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை

அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார்.

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மதுரையில் ஜனவரி 3ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என மு.க.அழகிரி அறிவித்தார். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை மதுரைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

அதன்படி, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆதரவாளர்கள் மதுரை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

சுமார் 16000 பேர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் ஆதரவாளர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி இன்று முடிவு செய்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...