Main Menu

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு பல்வேறு நாடுகளும் அழைப்பு!

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜேர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ரஷ்ய மண்ணில் அந்நாட்டைச் சேர்ந்த குடிமகனுக்கு எவ்வாறு இது நடத்தப்பட்டது என்பதை ரஷ்யா விளக்க வேண்டும். இது தொடர்பாக முழு விசாரணையை ரஷ்யா நடத்த வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

எனினும், ரஸ்ய அரசாங்கம் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்தும் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மொஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜேர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜேர்மனி அரசாங்கம் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...