Main Menu

அரச அலுவலகங்கள் 6 நாட்கள் இயங்குவதற்கு உத்தரவு!

அரச அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,   4ஆம் கட்ட ஊரடங்கு தொடங்கும் மே 18ஆம் திகதி  முதல் 50 சதவீத பணியாளர்களுடன்  சனிக்கிழமை உட்பட வாரம் 6 நாட்கள் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை இரு குழுக்களாக பிரித்து,  இரண்டு, இரண்டு நாட்களாக சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களை எப்போது அழைத்தாலும் பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும் என்றும்  அலுவல்களை மேற்கொள்ள எப்போதும் மின்னணு தகவல் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குரூப் ஏ அலுவலர்களும், அலுவலக தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களும் வாரம் 6 நாட்களும் பணிக்கு வரவேண்டும் எனவும்,  இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...