அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்: நாளை வாக்கெடுப்பு
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற்று, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும்.
பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி.யுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். அத்துடன் தீர்மானமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான முடிவை எடுக்கப்போகின்றது என்பதே இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகால அரசாங்கத்தின் பலவீனங்கள் மற்றும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நிலைமைகளை அடுத்து அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை காரணம் காட்டி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்தது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுவதுடன் நாளை மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜே.வி.பி., கூட்டு எதிர்க்கட்சி, ஆகியன அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுதந்திரக் கட்சி இதுவரை தமது முடிவு தொடர்பில் அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும் அரசாங்கத்திடம் அறுதிப் பெரும்பான்மை இல்லாமையினால் இந்த பிரேரணைக்கு முகம்கொடுப்பதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் பிரேரணையை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை.
நேற்றைய தினம் அவர்களின் பாராளுமன்ற குழுகூடி ஆராய்ந்த போதிலும் கூட அவர்களின் இறுதி நிலைப்பாடு ஒன்று எட்டப்படவில்லை. இந்நிலையில் நாளை காலை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடி இறுதி முடிவினை எடுக்கவுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களையும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -6 ஆசனங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 ஆசனங்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி – 6 ஆசனங்கள் அடங்கலாக), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. இவற்றில் ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் தமது ஆதரவை வழங்கியிருந்தது. இதன்படி ஐக்கிய தேசிய முன்னணி முழுமையாக 107 ஆசனங்களையும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களையும் கொண்டிருந்தது.