Main Menu

அரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்!

மோட்டோ ஜிபி பந்தய தொடரின் அரகன் ஜிபி பந்தயத்தில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் 14ஆவது சுற்றான அரகன் ஜிபி பந்தயம், நேற்று சியுடாட் டெல் மோட்டார் டி அரகன் ஒடுதளத்தில் நடைபெற்றது.

எதிர்பார்ப்பு மிக்க இந்த பந்தயத்தில் 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 57.221 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

நடப்பு தொடரில் மார்க் மார்கஸ், பெற்றுக் கொண்ட எட்டாவது வெற்றியாக, இந்த வெற்றி பதிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து, டுகார்டி அணியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ, 4.836 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, டுகார்டி அணியின் மற்றொரு வீரரான ஜெக் மில்லர், 5.430 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 சுற்றுகளின் முடிவில், மார்க் மார்கஸ் எட்டு வெற்றிகளுடன் 300 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

டுகார்டி அணியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ இரண்டு வெற்றிகளுடன், 202 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சுசூக்கி அணியின் அலக்ஸ் ரின்ஸ், இரண்டு வெற்றிகளுடன், 156 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னறியுள்ளார்

இத்தொடரின் பதினைந்தாவது சுற்றான தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி, சாங் சர்வதேச ஒடுதளத்தில் நடைபெறவுள்ளது.

பகிரவும்...