Main Menu

அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையோ- இழப்பீடு கோருவதையோ ஏற்க முடியாது: சீனா

அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி தெரிவித்துள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, வைரஸ் தொற்று பரவியதற்கு சீனாவே காரணம் என கருதுகின்றது. இதனால் சீனா மீது ஜனாதிபதி ட்ரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து ஹாங் யேசூயி கூறுகையில், ‘உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதற்கும் சீனாதான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும்

அமெரிக்கா ஏதேனும் சட்டநடவடிக்கை எடுத்தாலோ அல்லது சட்டமூலம் கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதிர்க்கும். அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்

அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது. கொரோனா வைரஸைப் பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயற்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. ஏராளமான தியாகங்களைச் செய்து கொரோனா வைரஸ் போரில் சீனா வென்றுள்ளது.

சீனாவில் கரோனா தொற்று ஏற்றப்பட்டதிலிருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களையும் சீனா தெரிவித்துவந்தது. உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறினோம். உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்.

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விடயம், அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் இதை அவர்களிடம் விட்டுவிட்டு, நாம் கருத்துக்கள் கூறுவதை விட்டுவிடுவோம்’ என கூறினார்.

பகிரவும்...