Main Menu

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது – அதிபர் ஹசன் ருஹானி

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். அசர்பைஜான் மாகாணத்தின் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி மக்களிடம் உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகி இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

இது அமெரிக்காவுக்கு நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதில் ஆகும். அந்நாட்டின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாது’’ என குறிப்பிட்டார்.

பகிரவும்...