Main Menu

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டா தசாப்தம்- விமல் வீரவன்ச

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மொட்டுக் கூட்டணியே வெற்றிபெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நுவரெலியாவில் காலநிலை மாறலாம். ஆனால், மொட்டை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற மக்களின் மனநிலை மாறாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாடுமீது பற்றுள்ள தலைவரை மக்கள் தெரிவுசெய்தனர். அவர் சிறந்த தேசிய தலைவராக செயற்பட்டு வருகின்றார். அவர் ஜனாதிபதியானதால்தான் கொரோனாவைகூட எமது நாட்டில் கட்டுக்குள்கொண்டுவர முடிந்தது.

பழைய ஜோடி இருந்திருந்தால் (ரணில் – மைத்திரிபால) இந்நேரம் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, எமக்கு கிடைத்துள்ள சிறந்த தலைவரின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அவருக்குத் தேவையான விதத்தில் அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகள் கோட்டாபய தசாப்தமாகும். இந்த நாட்டை கட்டியெழுப்பும் தசாப்தமாகும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து புதியதொரு யுகத்தை உருவாக்கும் தசாப்தமாக அமையும். எனவே, காலாவதியான அரசியல்வாதிகளை நாடாளுமன்றம் அனுப்பாமல், சிறப்பாக செயற்படக் கூடியவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

பகிரவும்...