பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கையின் பத்து முன்னணி வீரர்கள் விலகல்!

பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரிலிருந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் பத்து முன்னணி வீரர்கள்; விலகியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற, பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியினருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை பாதுகாப்பு ஆலோசகரான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ரொஷான் குணத்திலக்க வீரர்களுக்கு விளக்கினார்.
இந்த சந்திப்பின் பின்னரே அணியின், பத்து முன்னணி வீரர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதனை, இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.
இதில் அணியின் முன்னணி வீரர்களான திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அகில தனன்ஜய, லசித் மாலிங்க, அஞ்செலோ மெதியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதில், அண்மையில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் உபாதைக்கு உள்ளான குசல் மெண்டிஸ், இந்த சுற்றுப்பயணத்திற்கான தேர்வில் சேர்க்கப்படவில்லை.
இதனால், பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை ஒருநாள் அணிக்கு, லஹிரு திரிமன்னே அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, ரி-20 அணியின் தலைவராக தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்மை இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் விளையாட இருந்தது.
இதற்காக முதலாவது கட்டமாக பாகிஸ்தான் சென்று, இலங்கை பாதுகாப்பு உயரதிகாரிகள், இலங்கை வீரர்களுக்கான் பாதுகாப்பினை உறுதி செய்தனர். இதன் பின்னரே இத்தொடருக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கமைய, 2009ஆம் ஆண்டு தாக்குதலுக்கு பின்னர் முதல் முறையாக ஒருநாள் மற்றும் ரி-20 சர்வதேச போட்டிகளைக் கொண்ட இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது.
எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கராச்சி சர்வதேச அரங்கில் நடைபெறவிருப்பதோடு, மூன்று ரி-20 சர்வதேச போட்டிகளும் லாஹூர், கடாபி அரங்கில் நடைபெறவுள்ளன. ரி-20 தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் பத்து முன்னணி வீரர்கள், திடீரென விலகியிருப்பது, பாகிஸ்தானை கடும் அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரே ஒரு ரி-20 போட்டியில் விளையாடியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.
எனினும், இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் இலங்கை அணி, என்ன செய்யப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் வண்டி மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...