நதிநீர் பிரச்சினை: எடப்பாடி பழனிசாமி- பினராயி விஜயன் நாளை சந்திப்பு
நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இருவரும் நாளை சந்தித்து பேச உள்ளனர்.
தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன.
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக இரு மாநிலங்களும் பேசி வருகின்றன.
கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பி குளம்-ஆழியாறு, ஆனை மலையாறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது ஆகிய பிரச்சினைகளும் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ளன.
அதோடு குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விடுவது உள்பட நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நீர் பிரச்சினையில் முல்லை பெரியாறு அணை வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதுபோல மற்ற நதிநீர் பிரச்சினைகளிலும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்சினையால் இரு மாநிலங்களிலுமே மழைநீர் வீணாகி வருகிறது. பருவமழை காலத்தில் கிடைக்கும் தண்ணீர் அனைத்தும் வீணாக கடலுக்கு செல்கிறது.
கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட இப்பிரச்சினையில் சுமூக முடிவு காண வேண்டுமென்று தமிழக-கேரள விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நதிநீர் பிரச்சினையை பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை பினராயி விஜயனும் ஏற்றுக் கொண்டார்.

நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு மாநில முதல்வர்களும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச தேதி முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நாளை (25-ந் தேதி) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் நாளை மாலை 3 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு அவருக்கு கேரள அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் சாய்குமார் ஆகியோரும் உடன் செல்கிறார்கள்.
இக்குழுவினருடன் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி- பினராயி விஜயன் இடையேயான பேச்சுவார்த்தையில் இரு மாநில நதிநீர் பிரச்சினைக்கு சுமூக முடிவு காணப்பட்டு உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கடந்த 2004-வது ஆண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அதன் பிறகு இப்போது தான் அதுபோன்ற பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...