ஐந்து தமிழ் தேசிய கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைக்கு பௌத்த மதகுருமார்கள் எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளமைக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு இந்த 13 கோரிக்கைகளில் ஒன்றான ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை துளியளவும் ஏற்க முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளதோடு, கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவர் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிடுகையில்,
மகாவலி குடியேற்ற திட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் ஒருமைப்பாடு அல்லது ஒற்றையாட்சி முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் 13 கோரிக்கைகளை தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ளன. இந்த கோரிக்கைகளை எந்த கட்சி ஏற்றுக் கொள்கின்றது என்பதை நாமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றோம். எந்தவொரு வேட்பாளருக்கும் இவற்றை கையிலெடுத்து வாசிப்பதற்கு கூட உரிமை கிடையாது என்று குறிப்பிட்டார்.
எல்லே குணவங்ச தேரர் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 5 தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை சுயநிர்ணய எல்லையாகக் கோருகின்றனர். இவர்கள் முழு இலங்கையையும் சுயநிர்ணய எல்லையாகக் கோரினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வடக்கை மாத்திரம் கோருவதை ஏற்க முடியாது.
மீண்டும் அடிப்படைவாதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. ஒருபுறம் முஸ்லிம் அடிப்படைவாதிககளும் மறுபுறம் தமிழ் அடிப்படைவாதிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது வரையில் தீர்வு வழங்கப்படவில்லை என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னை சந்திதத்த போது கூறினார்.
தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னமும் இந்த அரசாங்கத்தால் கண்டு பிடிக்க முடியாதுள்ளது. இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் என்ன பயன்? எனவே இம்முறை மக்கள் தமது வாக்குகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
மாகல்கந்தே தேரர் குறிப்பிடுகையில்,
தமிழ் அரசியல்வாதிகளின் இந்த அடிப்படைவாத கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைச் செய்த போதிலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க முடியாமல் போயுள்ளது.
விடுதலைப்புலிகளின் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாதன் பின்னர் புனர்வாழ்வளிக்குமாறு கோருகின்றேன் என்றார்.
பகிரவும்...