Main Menu

வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை

ஒடிசாவில் இருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதுவை ஏற்றிச்சென்ற பனாமா நாட்டின் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று இன்று (22) வங்காள விரிகுடாவில் மூழ்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்திக் குறிப்பின்படி, பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் 24 பணியாளர்களுடன் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

மேலும், கப்பலில் இருந்த பணியாளர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடலோரக் காவல் படையும் இந்திய கடற்படையும் இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

“பணியாளர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை” என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.