Main Menu

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

​2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது, யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரியின் ‘Royal Navy Young Officers Course’ பாடநெறிக்குச் செல்வதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

​அச்செயல் ஊடாக முறையற்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

​ பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 08 ஆகும்.

​இக்குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரதிவாதிகளிடம் கையளிக்க எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்படவுள்ளது.