கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. தவெக ஆட்சி அமைந்த பிறகு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.
கரூரில் கடந்த 10-ம் தேதி நடந்த நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
‘கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கும். மேலும், சாட்சிகளைக் கலைக்கும் நடவடிக்கையாகும். இது தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தும். போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் மட்டுமே அரசுப் பணி வழங்க வேண்டும். எனவே சிபிஐ, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் முதல்முறையாக விசாரணைக்கு வந்தபோது, ‘உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்காலிகப் பணியே வழங்க வேண்டும். இப்பணி, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்’ என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மனுதாரர்கள் தரப்பு: அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு, பகலாக தயாராகி வருகின்றனர். அப்படி இருக்க, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது சட்ட விரோதம். கருணை அடிப்படையில் பணி எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதை பின்பற்றாமல் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிய பிறகும், அரசுப் பணி வழங்க வேண்டிய அவசியம் என்ன? ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அந்த சம்பவங்களுடன் கரூர் சம்பவத்தை ஒப்பிட முடியாது.
அரசுத் தரப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிகப் பணியே, அதுவும் சாதாரணப் பணியே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற பல சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கருணைப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
பாதிக்கப்பட்டோர், தங்கள் குடும்பத்தில் விலைமதிக்க முடியாத ஒருவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில்தான் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை எந்த வகையிலும் பாதிக்காது. ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதாலேயே அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
வயது, கல்வித் தகுதி தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே கருணைப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதை ஏன் எதிர்க்க வேண்டும்? ஒவ்வொரு துறையிலும் காத்திருப்போர் பட்டியல் உள்ளது. அதை பரிசீலித்து முறைப்படியே பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். உடனடியாக பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தரப்பு: உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கியதில் டிஎன்பிஎஸ்சிக்கு தொடர்பு இல்லை. கருணைப் பணி பெற்றவர்களின் பணியை நிரந்தரம் செய்ய டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் பெறும் நடைமுறையில் விலக்கு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதன்பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் சூழலில் அதுபற்றி கருத்து தெரிவிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. அதேநேரம், அரசுப் பேருந்து விபத்துகள், சிவகாசி பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும் இதேபோல அரசு வேலை கேட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
ராணுவத்தில் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அதையும், கூட்ட நெரிசலில் உயிரிழப்போரையும் ஒப்பிட முடியாது. இதை ஏற்றுக்கொண்டால் உயிரிழப்போரின் குடும்பத்தினர் அனைவரும் அரசு வேலை கேட்பார்கள். இதனால் அரசு நிர்வாகம் பாதிக்கும். கருணை அடிப்படையிலான வேலை என்பது அரசுப் பணியில் இருந்து உயிரிழப்போரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க மட்டுமே பொருந்தும்.
அரசு வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அதுகுறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி அளிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பணி நிரந்தரத்துக்கு ஒப்புதல் பெற விலக்கு பெறப்பட்டுள்ளது என்று மட்டுமே தெரிவித்துள்ளனர். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்வதாக இருந்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு திறன் பயிற்சிகளை வழங்கி உதவலாம். இவ்வாறு பணி வழங்குவதைவிட அது பயனுள்ளதாக இருக்கும்.
அரசுப் பணியில் எதுவும் சாதாரணப் பணி அல்ல. அது ஒருவரது குடும்பத்துக்கு உதவும் பணியே. எனவே, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
ஊதியம் பெறும் முன்பே வேலை இழப்பு: கரூரில் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட அதே நாளில் (ஜூலை 10) இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘தற்காலிகப் பணிதான் வழங்க வேண்டும். பணி நியமனங்கள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும். அரசுப் பணி பெற்றவர்கள் முதல் மாத ஊதியம் பெறுவதற்கு முன்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி, 17 நாட்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதல் மாத ஊதியம் பெறுவதற்கு முன்பாகவே பணி நியமனம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு: சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறோம். இந்த வழக்கில் பணி நியமனம் பெற்ற பயனாளிகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை.
அவர்களது தரப்பு கருத்துகளைக் கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க ஒருவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
