திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது
அரசாங்கத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக கோப் குழு (COPF) இன்று மீண்டும் கூடவுள்ளது.
குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது, திறைசேரிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) ஆகியோர் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சர்ச்சை குறித்து மத்திய வங்கியும், நிதி அமைச்சும் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நிதி காணாமல் போனமைக்கான பின்னணி மற்றும் குறைபாடுகள் குறித்து இன்று விரிவாக ஆராயப்படவுள்ளதாகக் குழுவின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
