Main Menu

கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்புச் சம்பவம் : 54 பேர் காயம் – 18 பேரைக் காணவில்லை

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்டாரின் ‘ராஸ் லஃபான்’ தொழிற்துறை நகரில் உள்ள ‘பர்சான்’ தொழிற்சாலையிலேயே இந்த “உள்வெடிப்பு” திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளுக்காகக் கட்டாரின் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கத்தார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு “தொழில்நுட்பக் கோளாறு” ஒன்றே காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கட்டார் உள்நாட்டு விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் தற்போதைய மருத்துவ நிலைமைகள் குறித்த விபரங்களை அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.
எனினும், இந்த வெடிப்பு காரணமாக ஆலைக்கு வெளியே பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான நச்சு வாயு அல்லது எரிவாயுக் கசிவுகள் எதுவும் ஏற்படவில்லை என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தொழிற்துறை மையத்தை நிர்வகிக்கும் ‘கத்தார் எனர்ஜி’ நிறுவனம், வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, ஆலையில் பரவிய தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தலைநகர் தோஹாவிற்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த ராஸ் லஃபான் தொழிற்துறை நகர், உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதி மையமாகும். இது உலகளாவிய இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உற்பத்தி செய்கிறது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில், இந்த தொழிற்துறை மையம் ஈரான் நாட்டின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகி “பாரிய சேதங்களை” சந்தித்திருந்ததாகக் கட்டார் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக, தனது விநியோகக் கடமைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதற்காகக் கத்தார் எனர்ஜி நிறுவனம் சில ஒப்பந்தங்களில் ‘ஃபோர்ஸ் மஜூர்’ (Force Majeure – தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கான விதிவிலக்கு) பிரிவைப் பயன்படுத்தியிருந்தது.
இதனால் இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வெடிப்புச் சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.