Main Menu

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணைகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அல்லது தகவல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இத்தகவல்கள் தற்போது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின் வசம் உள்ளன.

2019 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் தற்போதைய அரசாங்கம், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் முறையாகக் கோரியுள்ளதா என்று UNP கேள்வி எழுப்பியுள்ளது.

அத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட பதிலை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விசாரணையின் மூலம் பெறப்படும் அனைத்து விசாரணை ஆவணங்களும் இலங்கையின் நீதித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று UNP வலியுறுத்தியுள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து நிகழ்ந்த முன்னேற்றங்களை நினைவுபடுத்திய UNP , உள்நாட்டு விசாரணைத் திறனில் உள்ள மட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 2019 ஏப்ரல் 21, அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முழுமையான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டது.

இலங்கை அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற உறுதியுடனேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் இதேபோன்றதொரு கோரிக்கை விடுக்கப்பட்டதாக UNP  மேலும் கூறியது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட இலங்கை முகமைகளுடன் இணைந்து FBI விரிவான விசாரணையை மேற்கொண்டதுடன், பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் அதற்கான அறிக்கையையும் சமர்ப்பித்தது.

கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், 2020 நவம்பர் 12 அன்று FBI சிறப்பு முகவர் மெரில்லி ஆர். காட்வின் (Merrilee R. Godwin) தாக்கல் செய்த 71 பக்கங்கள் கொண்ட உறுதிமொழி ஆவணம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் 2020 டிசம்பர் 11 அன்று பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு ஆகியவற்றையும் UNP சுட்டிக்காட்டியது.

இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த பல சந்தேக நபர்கள், அக்காலகட்டத்திலேயே இலங்கை அதிகாரிகளின் காவலில் இருந்தனர் என்பதையும் அது குறிப்பிட்டது.

எனவே, அமெரிக்காவின் புலனாய்வு தொடர்பான ஆவணங்கள் FBI மற்றும் நீதித்துறையின் வசம் உள்ளன என்ற தனது நிலைப்பாட்டை UNP மீண்டும் வலியுறுத்தியது;

அத்துடன், அந்த ஆவணங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் ஏதேனும் கோரிக்கை விடுத்ததா என்பதைத் தெளிவுபடுத்துமாறும், அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அதன் முடிவு என்ன என்பதை வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்தை அது கேட்டுக்கொண்டது.