முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ உரையை நிகழ்த்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்திருந்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் பின்னர் சட்டசபை அமர்வுகள் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, த.வெ.க. அரசின் முதலாவது கூட்டத்தொடர் இன்று கூடவுள்ளது.
இன்றைய கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஆளுநர் அர்லேகர் காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 10.00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதும், அரசினால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிப்பார். இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை சபையில் வாசிப்பார். அத்துடன் இன்றைய சபை நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதுடன், அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழுவுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
