AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித அறிவாற்றலை பிரதிபலிக்கும் வகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் உலகளவில் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei) எச்சரித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி வேலைவாய்ப்பு சந்தையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் தாக்கங்கள் குறித்து தனது கவலைகளையும் தீர்வுத் திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, உலக நாடுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கிய பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதன்படி, AI தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை இழக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முறையான ஊதியக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப தொழிலாளர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Upskilling) வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பையும் வேலைவாய்ப்பு நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த அரசாங்கங்கள் தங்களது கொள்கைகளில் அவசர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மனிதர்களுக்கான பல வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ள நிலையில், உலக நாடுகள் முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுக்க வேண்டும் என டாரியோ அமோடி வலியுறுத்தியுள்ளார்.
