அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்
அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம்,
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது .
ஆனால் அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறோம்.
சட்டம் அனைவருக்கும் சமமானது மாதத்தின் பெயரால் சட்டத்தை மலினப்படுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ யாரும் முயற்சிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.
மேலும், தெற்கை பொருத்தவரையில் இந்த சிறுமியின் விவகாரத்தை திசை திருப்பவும் பௌத்த துறவி சம்பந்தப்பட்டதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் குரல் கொடுக்க முன்வராமை கவலை அளிக்கிறது.
இலங்கையில் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான அநீதியாக இந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் பார்க்கின்ற நிலையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.


