2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ மாஸ்டர்மைண்டுகள் இன்று கூடுகின்றனர்.
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ள இந்த இரண்டு நாள் மாநாடு, இன்று மாலை தொடங்குகிறது. போர்நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, ஹார்முஸ் வழியாக கடல்சார் வணிக நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் மீட்டெடுப்பதே இந்த சந்திப்பின் முதன்மை நோக்கமாகும். உலகின் பல முக்கியமான இராணுவ மூளைகள், தலைவர்கள் இங்கே வர உள்ளனர்.
2ம் உலகப்போருக்கு பின் நடக்கும் மிகப்பெரிய இராணுவ ரீதியிலான கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தின் முடிவுகளே இதற்கு பின் வரும் நாட்களில் ஈரான் – அமெரிக்கா போரின் சூழலை நிர்ணயிக்கும்.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த முயற்சியைத் தலைமை தாங்கி நடத்துகின்றன. கடந்த வாரம் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 நாடுகள் பங்கேற்ற இணையவழி மாநாட்டில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை தொடர்ந்து இந்த கூட்டம் நடக்கிறது. இதை தற்போது ஒரு ஒருங்கிணைந்த இராணுவ வியூகமாக மாற்றுவதே இந்த லண்டன் கூட்டத்தின் இலக்காகும்.
அதாவது 30 நாட்டு இராணுவ மாஸ்டர்மைண்டுகள் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்தை முறைப்படுத்துவதே நோக்கம் ஆகும்.
இந்த பாதுகாப்புப் பணியில் இணைய 12-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கு எந்த ஒரு கூட்டணிக் நாடுகளின் ஆதரவும் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்த நிலையில், சர்வதேச நாடுகளின் இந்த கூட்டு முயற்சி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) இது குறித்துக் கூறுகையில், “இந்தக் கூட்டத்தின் முக்கியப் பணி, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், ஒரு நிலையான போர்நிறுத்தத்தை ஆதரிப்பதற்கும் ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்குவதாகும். இந்த விவாதங்களின் மூலம் உண்மையான முன்னேற்றத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.
உலக எரிசக்தி வழித்தடங்களில் ஹார்முஸ் நீரிணை மிகவும் முக்கியமானது. தற்போது நிலவி வரும் போர் சூழலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையான போர்நிறுத்தம் ஏற்பட்டவுடன், இந்த பாதுகாப்புத் திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த செய்திகளுக்கு மத்தியில், இந்த சர்வதேசக் கூட்டு முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட்டால் மட்டுமே இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் சேருவோம் என்று ஈரான் கூறியுள்ள நிலையில், லண்டனில் நடக்கும் இந்த இராணுவத் திட்டமிடல் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது.
