Main Menu

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன்

அமைச்சரின் இந்த இராஜினாமா முடிவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வரவேற்றுள்ளார்.

எனினும், தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை நிர்வாகமே ஒப்புக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தில் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பாதுகாத்துப் பதவியில் தக்கவைக்க வாக்களித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைத்ததாகக் கருதப்படும் ஒருவரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அமைச்சரின் இந்த இராஜினாமா அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என ஏனைய எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை எனத் தெரியவந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குச் சுயாதீனமாக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.