Main Menu

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார்.

2026 ஏப்ரல் 17 திகதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவும், 2009 முதல் இறக்குமதிகளை ஆய்வு செய்வதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஈடுபடுத்தவும் எடுக்கப்பட்ட அண்மைய நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தனது இந்த முடிவை எடுத்திருப்பதாக குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும், வெளிப்படையான ஆட்சிமுறைக்கான முன்னெடுப்பையும் ஆதரிப்பதாகக் கூறிய அவர், நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தினார்.

விசாரணை சுதந்திரமாகவும், எந்தவிதமான செல்வாக்குச் செலுத்துதலுமின்றியும் தொடர்வதை உறுதி செய்வதற்காகத் தாம் பதவி விலகுவதாகவும், விசாரணையிலிருந்து வெளிவரும் எந்தவொரு முடிவுகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜெயகொடி குறிப்பிட்டார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது தமக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தூய்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் அரசின் விரிவான சீர்திருத்தத் திட்டங்களுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.