உலக அளவில் கடந்த தசாப்தத்தில் அதிக மக்களை வறுமையில் இருந்து மீட்ட நாடு இந்தியா- ஐ.நா.
உலகில் கடந்த 10 வருட காலத்தில் 27.3 கோடி இந்திய மக்கள் பன்முக வறுமை சூழலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு தொடக்கம் என்ற அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஏழ்மை குறித்த அறிக்கையில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை 75 நாடுகளில் 65 நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பன்முக வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வளர்ந்து வரும் 107 நாடுகளில் 130 கோடி மக்கள் பன்முக வறுமைச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வறுமைச் சூழலில் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பன்முக வறுமைக் குறியீடு என்பது ஏழைகளின் அன்றாட வாழ்வு, சுகாதாரக் குறைவு, கல்வியறிவின்மை, போதுமான தரமான வாழ்க்கைத்தரம் இல்லாமை, வேலையின்மை, வன்முறை அச்சம் போன்றவற்றை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது