Main Menu

வேற்றுமை கடந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்- சாணக்கியன்

தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை கடந்து விழித்தெழ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியத்தைக் காத்து விலைமதிக்க முடியாத தமிழர் உரிமைகளை வென்றெடுக்க நாம் எல்லோரும் ஒன்றாய் இணைவோம்.

இலங்கையில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் என்று கூறுகின்ற ‘நாகர்’ எனப்படும் மக்கள் பேசிய மொழி நமது தமிழ் மொழி. சிலரது தந்திர செயல்களினால் மத மாற்றம் எனும் போர்வைக்குள் அகப்பட்ட தமிழர்களை மதம் மாற்றியது மட்டுமல்லாமல் வேற்று மொழியையும் திணித்தார்கள்.

இருந்தும், நம் தமிழ் மொழியைக் காக்க சிலர் முழுமூச்சாகச் செயற்பட்டனர். தற்காலத்திலும் நமது அறியாமையினால் தமிழர்களின் தொல்பொருட் சின்னங்கள் சில அழித்தொழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்தும் இத்தகைய செயல்களை மேற்கொண்டு பெரும்பான்மையினரின் மொழியை உயர்வாக கருதுவதற்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

தமிழ் மக்களின் தொல்பொருட் சின்னங்கள் பரந்து காணப்படும் இலங்கையின் பல இடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன. இன்னும் இந்நிலை தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே, நாம் விழித்தெழ வேண்டும்! இவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஓரினமாய் வாழும் தமிழர்களாகிய நாம் பேதங்கள் கடந்து தமிழர்களுக்கே உரித்துடைய, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நம் மூத்த குடிகளின் பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாப்பதோடு நமது உரிமைகளை வென்றெடுக்கவும் சிந்தித்தித்து வாக்களிக்க வேண்டும்” என அவர் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...