Main Menu

குடியுரிமை விவகாரம்: இந்தியாவுடன் பேசவுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாக சட்டத் திருத்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பாக தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்தைில் கரிசனை காட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழர் தரப்பின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவப்பட்ட போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அகதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புபட்டுள்ள ஒன்றாகும். அதாவது அகதிகள் விடயத்தில் அவர்களின் அக்கறையும் உள்ளது.

அத்துடன் இந்திய அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் முன்வைத்து வருகின்ற காரணியாகும். இன்றும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னைய ஆட்சியின் போதும் நாம் கூறினோம். அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அவர்களை இங்கு வரவழைக்கும் வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...