Main Menu

தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்படும் ரெலோவில் அங்கம் வகிக்க முடியாது புதிய அரசியல் கட்சியை உருவாக்க உள்ளோம் – சிறிகாந்தா

தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவில் இனியும் அங்கம் வகிக்க முடியாது.ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் வெளியேறி இருவரத்துக்குள் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்க உள்ளோம் என சட்டத்தரணியும் ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகமுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொட்ர்பாக ரெலோ எடுத்த முடிவுக்கு மாறாக யாழ் மாவட்ட கிளை பொது வேட்பளராக களமிறங்கிய எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்தது. அதன்படி அவருக்காக தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது.

இதனையடுத்து ரெலோவின் தலைமை குழு திருகோணமலையில் கூடி எம்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் செயலாளர் நாயகம் பதவியில் இருந்த என்னையும் அதில் இருந்து நீக்குவதாகவும் முக்கிய சில பதவிகளில் இருந்த ஏனையவர்களும் அதிலிருந்து விளக்கப்பட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடட தென்னிலங்கை கடசிகளின் இரு பிரதான வேட்ப்பாளர்களும் 5 தமிழ்க் கடசிகள் ஒன்றிணைந்து தயாரித்த 13 அம்சக் கோரிக்கைகளை தொட்டுக் கூட பார்க்க மாடடோம் என கூறினார்கள்.இவ்வாறான நிலையில் வவுனியாவில் திடீரென கூடிய தமிழரசுக் கட்சியின்  செயற் குழு எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஐக்கிய தேசிய முன்னனி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தீர்மானித்தது.இதே முடிவை ரெலோ தலைமைக்குழுவிலும் பல எதிர்ப்புக்கு மத்தியில் தீர்மானமாக எடுக்கப்பட்டது.

இதன் பின்னரே நாம் பொது வேட்ப்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கத்துக்கு யாழ்ப்பாண மாவட்ட கிளை ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி அவருக்காக தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்டோம்.நீண்டகாலமாக தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என பலர் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் அதில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.எனவே நாம் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து பயணிக்க தீர்மானித்துள்ளோம்.

நாம் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர்,கொள்கைகள் போன்ற விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.நாம் ஆரம்பிக்கவுள்ள கட்சியில் தமிழரசுக் கட்சி தவிர்ந்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பயணிக்கலாம்.நாமும் நல்லதொரு நேர்மையான தலைமைகளுடன் பயணிக்க தயாராக இருக்கின்றோம்.எமது இந்த புதிய முயற்சிக்கு வடக்கு கிழக்கில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளன.குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் இருந்து இப்போதே ஆதரவுகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கடசியின் ஒரு கிளையாகவே தமிழரசுக் கடசி செயற்பட்டு வருகின்றது.இவ்வாறானவர்களை எங்கே அனுப்ப வேண்டுமோ அங்கே மக்கள் விரைவில் அனுப்புவார்கள்.கோத்தாவை தோற்கடிக்க வேண்டும் என பிரகடனம் செய்தவர்கள் இப்போது அதே கோத்தாபயவுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.

இவர்களுக்கு வெட்கம், மானம் இல்லையா? போர் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல தமிழரசின் சர்வாதிகார போக்குக்குள் சிக்கியுள்ளது.இதற்கு நாம் தொடர்ந்தும் துணை போக முடியாது. அவர்களின் எடுபிடிகளாக நாம் இனியும் செயற்பட முடியாது.எனவேதான் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.இதில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் இணைந்து பயணிக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.

பகிரவும்...