சஜித் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வினை வழங்குவார்- சுவாமிநாதன்
25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலை முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ரசிகா கமகேயின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாச ஒரு நேர்மையான மனிதர். செய்யும் செயற்பாடுகளை தனது தந்தையைப் போல் நேர்மையாக செய்பவார். ஜெயவர்த்தன, பிரேமதாச அதன் பின்னரான தலைவர்கள் என பலருடன் ஐக்கிய தேசியக் கட்சிக்காக நான் வேலை செய்தேன். என்னைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சிதான் முக்கியம். 1977 இல் இருந்து நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றேன். அந்தக் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு தாவவில்லை. அந்தவகையில் இன்று ஜனாதிபத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு எங்களுடைய அபேட்சகர் சஜித் பிரேமதாச தான் காரணம். அவர் நிச்சயமாக 16ஆம் திகதி வெற்றி பெற்று தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிடுகின்றார் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். 25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதுவரை வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தயவில் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவும் எங்களுடைய கட்சியல்ல. ஆனாலும் நாங்கள் சேர்ந்து அவருடைய பெயரை ஆமோதித்தோம். ஆனால் இன்று அப்படியில்லை. எங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச போட்டியிடுகின்றார்.
எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன. அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை அரசியல்வாதிகள் சஜித் பிரேமதாசவுடன் பேசி தீர்ப்பார்கள். தற்போது பொருட்களின் விலைவாசி கூடியுள்ளது. வரி காரணமாகவே அவ்வாறு கூடியுள்ளது. அந்த நிலைப்பாட்டை நாங்கள் குறைக்கலாம். சஜித் பிரேமதாச நாட்டின் தலைவராக வந்தால் அவர் வெளிநாட்டில் இருக்கும் முதலீட்டின் மூலம் வருமானத்தைக் கூட்டலாம். தற்போது ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடக்கும் அரசாங்கத்தில் சென்ற ஆண்டு முன்னைய அரசாங்கம் பெற்ற கடன்களை நாங்கள் செலுத்தியிருக்கின்றோம்.
கடன்களை செலுத்தியவண்ணம்தான் இவ்வளவு வேலைகளையும் செய்கின்றோம். கடனை நான்கரை வருடமாக ஐக்கிய தேசியக் கட்சி செலுத்தியது. அந்த கடனில் 75, -80 வீதம் மீளச்செலுத்தப்பட்டுள்ளது. இனி எல்லோரும் நன்மையடையக்கூடிய நிலை உருவாகும். அடுத்து வரும் 10 வருடகாலம் ஜனாதிபதியாக இருப்பதற்கு சஜித்துக்கு வயது இருக்கிறது. இளம் வேட்பாளர் அவர். அவர் இந்த நாட்டை இன்னும் செழுமையாக மாற்றுவார் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிகா கமகே, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.