Main Menu

அமெரிக்காவின் 480 மில்லியன் டொலர் கொடை பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம்

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்,  ஜூலை 22ஆம் நாளுக்குள்  அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அடுத்தவாரம் நிதியமைச்சர் நாட்டில் இருக்கமாட்டார் என்பதால் அதற்கடுத்த வாரம், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று, இந்த திட்டத்துடன் பணியாற்றும், அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் நிறுவனத்துடன் செய்து கொள்ளும் உடன்பாட்டுக்கு அமைய சிறிலங்காவுக்கு ஐந்து ஆண்டுகளில் 480 மில்லியன் டொலர் கொடை அபிவிருத்தி நிதியாக கிடைக்கும்.

அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்திருந்தார்.

உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டால், திட்டம் சரிந்து போகவோ அல்லது வேறு இடங்களுக்கு நிதி ஒதுக்கப்படவோ மாட்டாது என, திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படும் போது, இந்த திட்டம் நடைமுறைக்கு வரும், நாங்கள் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும், என்றும் அவர் கூறினார்.

பகிரவும்...