ஜனாதிபதியின் விடுதலைப்புலிகள் சம்பந்தமான கூற்று நம்பிக்கைத் துரோகமானது – பிரபா கணேசன்
அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் செய்தே யுத்தம் நடத்தினார்கள் என்று தெரிவித்திருப்பது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த பாரிய துரோகமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது;
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கிற்கு பிரசாரம் செய்யச் சென்ற மைத்திரிபால சிறிசேன, விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்தது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே. ஆகவே அவர்களின் நோக் கங்களை நிறைவேற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு தீர்வை வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கமைய தமிழ் மக்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார் கள். ஆனால் இன்று போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் விடுதலைப் புலிகள் போதைப்பொருள்களை விற்று யுத்தம் புரிந்தார்கள் என்று கூறியிருப்பது தமிழ் மக்களுக்கு அவர் இழைத்திருக்கும் பாரிய துரோகமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, ஒருபோதும் விடுதலைப் புலிகள் போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெரிவித்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் காலத்தில் போதைவஸ்துகள் இன்றி மக்கள் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஜனாதிபதியின் கூற்று மக்கள் மத்தியில் வேடிக்கையாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது 100 நாள் வேலைத்திட்டத்தை வைத்துக்கொண்டு வாக்குகளைக் கோரினார்கள். அண்மையில் 100 நாள் புத்தகம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்கின்றார். அதே போல் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக் ஷவுக்கு தான் வீட்டுக்குச் செல்ல வானூர்தி வழங்கியதாக பெருமையுடன் மக்களுக்கு தெரிவித்திருந்தார். அதன் பிறகு இவ்வானூர்தி சம்பந்தமாக தனக்கு ஏதும் தெரியாது என்றும் யார் கொடுத்தது என்பதற்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி பதவியேற்றதும் தான் இனி போட்டி யிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இப்பொழுது தான் மீண்டும் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கின்றார்.
அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை சிங்கப்பூரில் இருந்த நண்பர் ஒருவரின் முகநூல் வாயிலாகவே அறியக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். இன்று தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகின்றார். அப்படியானால் பாதுகாப்பு அமைச்சராக இவர் இருந்து கொண்டு தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவார். இவர் ஒரு நகைச்சுவை ஜனாதிபதியாகவே மக்கள் மத்தியில் தெரிகின்றார். இவரை பதவிக்கு கொண்டு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுமே இதற்கு பதிலளிக்க வேண்டும்.
நான் வன்னி மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிப்பாளராக செயல்பட்ட போது நான் தெரிவித்த, தமிழ் மக்களின் நலன் கருதிய எந்தவொரு வேலைத்திட்டத்தையும் இவர் செய்து கொடுக்கவில்லை. மாறாக மஸ்தான், ரிஷாத் போன்றவர்களின் பேச்சுக்கமைய எனது வன்னி மாவட்ட தமிழ் மக்களின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க விடவில்லை. 86 வீதம் தமிழ் மக்கள் வாழும் வன்னி மாவட்டத்தில் ஒரு சதவீதமான வாக்குகளையேனும் இவரால் மஸ்தான் போன்றவர்களின் ஊடாகப் பெற முடியாது.
இன்று வன்னி மாவட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார்கள். சுமந்திரன் போன்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு பெற்றுக் கொடுக்கும் இடைத்தரகர்களை இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். எனது தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கி ரஸ் ஊடான அபிவிருத்தியை பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள் என்றார்.