Main Menu

3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொன்ற தாய் கைது

துபாயில் கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் தான் பெற்ற 3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

துபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எகிப்து நாட்டைச் சேர்ந்த 44 வயது நபர் 26 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையிலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் கணவர் வேலைக்கு சென்று விட்டார்.

எனினும் கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் வீட்டில் அந்த பெண் எரிச்சல் பட்டுக்கொண்டே வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தார். சலவை செய்ய வாஷிங் மெஷினில் துணிகளை போட்டுக் கொண்டிருந்தபோது, டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென அழ தொடங்கியது. இதனால் குழந்தையை அழாமல் இருக்க செய்தார்.
எனினும் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், கூடுதல் எரிச்சல் அடைந்த அந்த பெண் கணவரின் மீதுள்ள ஆத்திரத்தால் கையில் கிடைத்த டி.வி. ரிமோட்டை எடுத்து குழந்தையின் மீது ஓங்கி அடித்தார். இதில் சுருண்டு விழுந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டிலிருந்து தப்பி சென்றார்.
இதற்கிடையே அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவர், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவியும் வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தப்பி சென்ற குழந்தையின் தாயை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...