2022 பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் இராணுவ தலைமை அதிகாரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு!
2022ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் டிவில்லியர்ஸ்க்கு (General de Villiers) மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு எழுந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பரபரப்புக்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போட்டியில் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் டிவில்லியர்ஸ் போட்டியிட்டால், பிரான்ஸில் ஐந்தில் ஒருவர், அதாவது 20 சதவீதமான மக்கள் அவருக்கு வாக்குச் செலுத்த ஆர்வமாக உள்ளதாக கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.
பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான Ifop மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன், மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இவர் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.