Main Menu

20ஆவது திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை, 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ளல் போன்ற தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது.

20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக பொதுத் தேர்தலின் போது கூறினாலும் இத்திருத்தத்தில் இருப்பதை எவ்வேளையிலும் வெளிக்காட்டவில்லை.

அத்தோடு, 20ஆவது திருத்தம் என்பது பொதுமக்களின் அபிலாசையல்ல. 20ஆவது திருத்தம் என்பது நல்லதென வெளிக்காட்ட முற்பட்டாலும் 20ஆவது திருத்தத்தில் பேராபத்தான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மக்கள் கொடுத்துள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தங்களுடைய குடும்ப அதிகாரமாக மாற்றுவதற்கான முயற்சியை முன்னெடுப்பது பேராபத்தாகும்.

இதன்காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாங்கள் நீதிமன்றம் செல்வதுடன் நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து 20ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...