Main Menu

11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு – குரலற்றவரின் குரல் அமைப்பு

11 மாத காலத்தில் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார் என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

பொசனை முன்னிட்டு ஜனாதிபதியால் 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து  முருகையா கோமகன் நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் பலருக்கு தண்டனை காலங்கள் நிறைவடைய சில மாதங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரன் அவர்களும் கடந்த 13 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கான தண்டனைக் காலம் இன்னமும் 11 மாத காலத்தில் நிறைவடையவுள்ள நிலையிலையே இன்றைய தினம் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பலர் 11 வருடங்கள் முதல் 26 வருடங்களுக்கு மேலாக கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கூட விடுதலைப்புலிகள் மீள் உருவாக்க குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் உட்பட குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், தீர்ப்பு வழங்கப்பட்டு மேன் முறையீடு செய்தவர்கள் என பல அரசியல் கைதிகள் இன்றும் சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கு குறைந்த பட்சமாக புனர்வாழ்வு அளித்தாவது அவர்களை விடுவிக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம். அண்மையில் அரச தரப்பில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்த அமைச்சர் நாமல் ராஜபக்சஷவிற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளை இன்றைய தினம் அரசியல் கைதிகளை விடுவித்தமைக்காக ஜனாதிபதிக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.“ என தெரிவித்தார்.

பகிரவும்...