Main Menu

ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்து: 27 மீனவர்கள் பலி

ஹோண்டுராஸ் நாட்டில் மோசமான வானிலை காரணமாக மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு ஒன்று கரிபியன் கடலில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த படகில் மீனவர்கள் மொத்தம் 91 பேர் பயணம் செய்தனர். கரிபியன் கடலின் மோஸ்க்விட்டியா என்ற பகுதியில் மீன்பிடி வேலையை செய்து கொண்டிருந்தபோது மீனவர்கள் பயணம் செய்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இதனால் படகில் நீர் புகுந்து கடலுக்குள் மூழ்கத்தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கடலில் சிக்கி தவித்த 55 மீனவர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் மீட்பு குழு வருவதற்கு முன்னர் கடல் நீரில் மூழ்கி 27 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 மீனவர்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து, உயிரிழந்த 27 பேரின் உடலினை கைபற்றிய மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மோசமான வானிலையை கருத்தில் கொள்ளாமல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...