Main Menu

வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் அனுசரனையை பெற அமைச்சர் திட்டம்!

தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய தொழிற் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “அண்மைக்காலமாக தொழில்சார் தகமைகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர் யுவதிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

இவ்வாறானவர்கள், தங்களுடைய தகமைகளுக்கு ஏற்றவகையில் தொழில் வாய்ப்பினை பெற்று கௌரவமாக வாழுகின்ற சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளினால் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதாவது, துணை மருத்துவ சேவைகள், சூரிய மின்கலம், மற்றும் ஹபிறிட் வாகன தொழில்நுட்பம் ஆகிய பயிற்சி நெறிகளை கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு தர வேண்டும் எனவும் தங்களுடைய பயிற்சி நெறிகளை விரிவுபடுத்துவதற்கு பெரும் சவாலாக இருக்கும் கட்டிட பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்வை பெற்றுத் தருவதாகவும் ஏனைய விடயங்களுக்கும் முடியுமான விரைவில் தீர்வை காணுவதற்கு முயற்சிப்பதாகவும்” உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...