Main Menu

வடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – ஆனந்தசங்கரி

வடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது தமிழரசுக் கட்சி நிம்மதியாக வாழ விடவேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக் கட்சியே காரணம். இந்நிலையில்  இவர்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவு செய்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என அவர் தனது ஊடக அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஏதோ ஓரளவு வறுமையான வாழ்விலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் செம்மையாக வாழ்ந்து வருகின்றார்கள்.

அதுமட்டுமல்ல பலவருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய பல தொழிற்சங்கங்கள் இன்றும் அங்கு பலமாகவே இருக்கின்றன. காலத்திற்குக் காலம் மாறி மாறி வரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மூலம் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுத் தங்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்கள்.

அங்குள்ள தலைவர்கள் அந்த மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள். 28 வருடங்களாக இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை தூசுதட்டி ஒரு சிலரின் பதவி மோகங்களுக்காக விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் சாதித்தது என்ன? இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அதேபோல சர்வதேசமே பார்த்து வியந்துபோன விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்துபோன போதும் அமைதியாக வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தார்கள். அத்துடன் முள்ளிவாய்க்கால் போரில் மக்களின் வாழ்வும், சொத்துக்களும் நாசமாகிய போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பலமான விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது நல்ல விடயம் என்று இப்போது தான் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

தந்தை செல்வா அவர்கள் 1949 இல் உருவாக்கிய தமிழரசுக்கட்சி வேறு. இப்போதுள்ள தமிழரசுக் கட்சிவேறு. 1972 இல் தந்தை செல்வா அவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடன் மலையகத் தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனும் இணைந்து தலைமையைப் பகிர்நது கொண்ட கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி. இந்த நிலையில் இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் ஆமை புகுந்த வீடாகிவிடக் கூடாது.

நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர்கள் யாரேனும் ஒரு அரசியல் கைதியையாவது விடுதலை செய்ய முற்பட்டார்களா? வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்கள் கை, கால்கள் சேதமடையாமல், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கவிட்டாலே போதும்.

தமிழரசுக் கட்சி தன் இருப்பைத் தக்கவைக்க அந்த அப்பாவி மக்களை பகடைக் காய்களாக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...