Main Menu

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...