Main Menu

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு- சென்னை வந்ததும் மோடி டுவிட்

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான முறைசாரா சந்திப்பு இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து திருவிடந்தைக்கு ஹெலிகாட்ரில் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், சீன அதிபருடனான சந்திப்பு மற்றும் தமிழகத்திற்கு வந்தது குறித்து மோடி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு:-

சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.

இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...