Main Menu

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக யோகராஜா தெரிவானார்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராஜா போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

இதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப் பகுதியில் இரண்டரை வருடங்கள் எனப் பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இதன்படி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் நடராயசிங்கம் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள் தமது பதவியினை இராஜினாமா செய்திருந்தனர்.

அந்தவகையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், இன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவாகியுள்ளார்.

பகிரவும்...