Main Menu

வளைகுடா மக்களின் பாதுகாப்பின்மைக்கு வௌிநாட்டு சக்திகள் காரணமாகிவிடலாம் – ஈரான் ஜனாதிபதி

வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள் சமூகங்களுக்கு வெளிநாட்டு சக்திகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கவலை வௌியிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எரிபொருள் களஞ்சியங்களின் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால், சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய பணிகள் சரிபாதியாக குறைந்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என சவுதி அரசாங்கமும், அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தநிலையில், வெளிநாட்டு சக்திகள் இங்கு காலூன்றினால், வளைகுடா பிராந்தியத்தில் மக்களிடையே பிரச்சினைகள் தோன்றி அவர்களின் பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ராணுவத்தின் ஆண்டுவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் நேரடி காணொலி மூலம் உரையாற்றிய ரவுகானி, ‘உங்களது (வெளிநாட்டு சக்திகளின்) வருகை இந்த பிராந்தியத்துக்கு வலியையும் சோகத்தையும்தான் எந்த தருணத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

எங்களது பிராந்தியம் மற்றும் நாடுகளிடம் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு எங்கள் பிராந்தியம் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நேரத்தில் எங்களது நட்பு மற்றும் சகோதரத்துவ கரங்களை நீட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என அண்டை நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...