வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், அந்த மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிச்சயமாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்ட அவர், விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட்டு முரண்பாடற்ற தேர்தல் முறைமை புதிய அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பாரிய போராட்டத்திற்கு மத்தியில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது என குறிப்பிட்ட ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
இதனை அடுத்து அரசியலமைப்பின் ஊடாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள விடயங்கள் புதிய அரசாங்கத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தியமைக்கப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.