Main Menu

வடக்கு அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை ; வடக்கு ஆளுநர் ஆதங்கம்

வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிட்டார். 

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

 “வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் நான் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் அதற்கு ஒத்துழைப்போ அல்லது எனக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றும் மனோ நிலையில் இல்லை. குறிப்பாக வடக்கில் நீர்ப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்ச்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு வருகின்றோம்.” 

மேலும், “எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுத்து வருகின்றேன். ஆனால் அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்வாதிகளில் ஒருவர் கூட என்னுடன் இது தொடர்பாக கதைக்கவில்லை.”

“மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனில் அக்கறை இன்றி செயற்படுகின்றனர். நான் அரசியல்வாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திட்டம் தொடர்பில் என்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.” 

இதேபோல, “அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று பல நடவடிக்கைகளை அவர்களின் விடுதலைக்காக எடுத்திருந்தேன். ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்திரனாரும் இன்றுவரை ஓர் நன்றி என்ற வார்த்தை கூட எனக்கு சொல்லவில்லை.” 

“நாட்டில் ஏற்படட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தது அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் எமக்கு இதுவரை 4 மொட்டைக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாம் பாதுகாப்பினை வழங்கியுள்ளோம். இவ்வாறு மொட்டைக் கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அதிகபட்ஷ தண்டனையை நாம் பெற்றுக்கொடுப்போம். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் குந்தகம் ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்” என்றார்

பகிரவும்...